.

Sai Ram
கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
அந்த வலியோடு தான்
தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
'நடைபாதை, புல்வெளி, புதர்
இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.'
அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
ஒருவித லயிப்போடு.

Sai Ram
நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரை காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண். மேலும் சில கிழவிகள் இருக்கிறார்கள். ஆனால் ஹெலனை விட வயது குறைவு தான்.

பதினைந்து வயது தொடங்கி பல வயதுகளில் பெண்கள் இந்த கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு நாளில் எத்தனை பொருட்களை விற்க வேண்டும் என ஓர் இலக்கு உண்டு. மற்றவர்களை விட ஹெலனுக்கு அந்த இலக்கு அதிகமாக இருந்தது. காரணம் சூப்பர்வைசர் பெண்மணிக்கு ஹெலனை பிடிக்கவே இல்லை.

"வயதானதுங்களை எல்லாம் என் தலையில கட்டி பிரச்சனை பண்றாங்க," என முணுமுணுத்தபடியே தான் தினமும் காலையில் பொருட்களை சப்ளை செய்ய ஆரம்பிப்பார் சூப்பர்வைசர். மொத்த கூட்டத்திற்கு நிர்ணயிக்கபட்ட இலக்கு விற்பனையை விட மிக குறைவாகவே மாத மாதம் விற்க முடிகிறது. அதற்கு காரணம் வயது அதிகமான பெண்கள் இந்த கூட்டத்தில் இருப்பது தான் என்பது சூப்ரவைசரின் எண்ணம். முக்கியமாக ஹெலனை அவளுக்கு பிடிக்கவே இல்லை. ஆனால் ஹெலனோ மற்றவர்களை விட அதிகமாக விற்று விடுகிறார். இதனாலே ஹெலனை வேலையை விட்டு அனுப்பவும் முடியாமல் இருக்கிறது.

தெருக்கு தெரு பல சரக்கு கடைகளும், கலர் கலரான பெரிய கடைகள் பலவும் தோன்றி விட்ட காலத்தில் வீடு வீடாக போய் விற்பனை செய்வது என்பது கிட்டதட்ட முடியாத காரியமாக போய் விட்டது. சென்னையில் இவர்களை திருடர்கள் போலவும் பிச்சைக்காரர்கள் போலவும் தான் பார்க்கிறார்கள். அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டிகள் இவர்களை கண்டாலே தடியை சுழற்றியபடி வருகிறார்கள்.

ஹெலனுக்கு வெயில் காலம் தான் மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. செருப்பில்லாமல் நடப்பது நெருப்பில் நடப்பது போல் இருந்தது. காலையில் எதாவது மோராவது கரைத்து குடித்து விட வேண்டும் இல்லையென்றால் இந்த வெயிலுக்கு தலை சுற்றி எங்காவது விழுந்து விட நேரிடும். அவருடைய மகள் இவரை விட மோசம். வெயில் காலத்தில் சேல்ஸிற்கு வரவே மாட்டேன் என வீட்டிலே படுத்து விடுவாள். அந்த சமயங்களில் முடிந்தால் பேத்தி வருவாள். இல்லை என்றால் இந்த மூதாட்டியின் சம்பளம் மட்டும் தான் வீட்டிற்கு கிடைக்கும்.

ஹெலனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள், ஒரு மகன். ஆனால் இப்போது உடனிருப்பதோ ஒரே ஒரு மகள் மட்டுமே. ஒரு மகளும் மகனும் சிறு வயதிலே இவர்களை விட்டு பிரிக்கபட்டு விட்டார்கள். இவரது கணவர் குழந்தைகள் கை குழந்தையாக இருக்கும் போதே இந்த குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். பக்கத்தில் இருந்த ஓர் அனாதை இல்லத்தில், 'உங்கள் குழந்தைகளை நாங்கள் இலவசமாக படிக்க வைக்கிறோம்,' என்கிற உறுதிமொழி கொடுத்து முதல் இரு குழந்தைகளை வாங்கி கொண்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரென ஒரு நாள் அவரது வீட்டிற்கு ஆட்கள் வந்து அந்த குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க போகிறோம், சில வருடங்கள் கழித்து அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து விடுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த சில வருடங்கள் வரவே இல்லை.

என் குழந்தைகள் என்னவானார்கள் என்று அந்த இல்லத்தின் நிர்வாகிகளிடம் ஹெலன் கேட்டால் யாரோ வெள்ளைக்கார குடும்பத்தில் தன் இரண்டு குழந்தைகளும் வளர்வதாய் தகவலும் சில சமயம் அந்த குடும்ப புகைப்படமும் கிடைக்கும்.

"உன் கூட கஷ்டபடறதை விட அங்க அவங்க நல்லா சந்தோஷமா இருக்காங்க," என கமெண்ட்டும் கிடைக்கும்.

கணவனை பிரிந்து உறவுகளை பிரிந்து குழந்தைகளையும் இழந்து ஒரு பெண் பிள்ளையோடு வாழ்ந்தார் ஹெலன். உதவுவதற்கு யாருமில்லை. அன்றைய கூலி அன்றைய உணவிற்கு என்கிற ரீதியில் தினமும் பிழைப்பு ஓடியது. மகள் வயதிற்கு வந்த சில வருடங்களில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். சில காலம் கழித்து கையில் இரண்டு குழந்தைகளோடு கணவனை பிரிந்து தாயிடமே வந்து விட்டாள்.

காலம் உருண்டோடி விட்டது. மகளுக்கே இப்போது நரை முடி எட்டி பார்க்க தொடங்கி விட்டது. இதெல்லாம் தற்காலிகமான துன்பம் தான், எல்லாம் நல்லபடியாய் மாறும் என ஹெலன் நினைத்து நினைத்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகி விட்டன. போக போக நிலை மோசமாகி கொண்டு தான் இருக்கிறது. பேத்தியும் வயதிற்கு வந்து விட்டாள். எப்படி இவர்களை கரையேற்றுவது என்றே புரியவில்லை. இப்படியாய் ஹெலனின் வாழ்க்கை ஒரு துயர காவியமாய் இருந்தது. ஆனால் அவரை நேரில் பார்க்கும் போது அந்த துன்பங்கள் அவரது முகத்தில் குடியிருப்பதை பார்க்கவே முடியாது. அவரது வார்த்தைகளில் எப்போதும் கிண்டலும் நக்கலும் கலந்திருக்கும். ஆனால் அவர் நாள்கணக்கில் அழுதது ஒரே முறை தான். அது அவர் தனது தத்து கொடுக்கபட்ட மகளோடு முப்பது வருடங்கள் கழித்து பேசிய போது.

அந்த வெளிநாட்டு போன் நம்பர் கிடைத்த போது அவரால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. எஸ்.டி.டி பூத்திற்கு போன போது அங்கிருந்து வெளிநாட்டிற்கு பேச முடியாது என சொல்லி விட்டார்கள். பிறகு ஒரு வழியாய் வேறு கடையில் இருந்து அந்த வெளிநாட்டு எண்ணை தொடர்பு கொண்ட போது போனை எடுத்தது அவரது மகளே தான். ஐந்து வயதில் பார்த்த தனது மகளை முப்பது வருடங்கள் கழித்து குரலை மட்டும் கேட்கும் போது அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. ஆனால் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசினாள். கடைக்காரர் உதவிக்கு வந்தார். அந்த போனில் பேசி பார்த்து விட்டு அது ஆங்கிலம் கூட இல்லை, வேறு எதோ ஐரோப்பிய பாஷை என சொன்னார். அந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டாளாம். அன்று தான் ஹெலன் என்றுமே இல்லாமல் அழுதபடியே நாள்கணக்கில் இருந்தார்.

இப்போது கூட வடபழனியில் வீடு வீடாக சோப்பு விற்று கொண்டிருக்கிறார் ஹெலன். இன்றும் தன் கையில் இருக்கும் சோப்புகளில் பாதியாவது விற்று விட வேண்டுமென வெயிலில் திரிந்து கொண்டிருக்கிறார்.

நன்றி
முதல் படம்: Mark Witton

Sai Ram
மேகங்கள் திடீரென ஒரு நாள்
வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

ஆற்றுத்தண்ணீர் போல
அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
போர் விமானங்கள் போல
சோகங்கள் போல
ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
எனக்கு பயமாக இருந்தது.

தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன்.

ஆனால்
முடிவே இல்லாத நீண்ட கனவாக
அது மாறி கொண்டிருந்தது.

அப்போது தான் அது நடந்தது...

Sai Ram
நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்

இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
இந்தியா
15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 70 சதவீதத்தினர் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். 80% இந்திய குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்து கிடைக்கவில்லை.

உலகம் முழுவதும் இன்று பட்டினியால் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார சரிவு. ஆனால் இந்தியாவில் உள்ள மோசமான நிலைக்கு காரணம் வறுமை, படிப்பறிவு இன்மை, காடுகளை அழித்தல், இயற்கை சீற்றங்கள் மற்றும் சமப்படுத்தபடாத உணவு வழங்கல் முறை. நம்முடைய அரசின் இயலாமையும் அரசு இயந்திரத்தில் உள்ள ஊழல் முறைகேடுகளுமே பட்டினி எண்ணிக்கையை உயர்த்தியபடி இருக்கிறது.

அரசாங்கம் பொய் சொல்கிறது
ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கிளை உலக உணவு நிறுவனமும் மற்றும் ஏராளமான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இன்று இந்தியாவில் நிலவும் பட்டினி நிலையை ஆபத்தானது என வர்ணிக்கிறார்கள். ஆனால் இந்திய அரசாங்கமோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அறிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, உண்மையான பிரச்சனையை அணுகாமல் ஓதுக்குவதுமான தவறாகும்.

நாட்டு மக்களிடையே சுபிட்சம் நிலவுவதாக காட்டுவதற்காக இப்போதுள்ள காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல, இது வரை இந்திய ஜனநாயகத்தினை ஆண்ட அத்தனை கட்சிகளும் இந்தியாவின் உண்மையான நிலையை மூடி மறைத்தே வைத்திருந்தார்கள். மத்திய வர்க்கத்தினரின் பொருளாதார எழுச்சியை நாட்டின் எழுச்சியாக காட்ட முயற்சித்தார்கள். இதன் மூலம் இந்தியா தனது ஏழை குடிமக்களை சமமான மக்களாக நடத்தவில்லை என்பதும் இங்குள்ள அரசிற்கு அவர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதும் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பு: அனைத்து தகவல்களும் ஜ.நா வெளியிட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கபட்டவை.

Sai Ram
கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை. வெகு சில சர்வதேச உதவிக்குழுக்கள் நுழையும் போது கூட கடுமையான விதிமுறைகள் அவர்களுக்கு விதிக்கபட்டன. செல்போன்கள், கேமிராக்கள், வண்டிகள் எதுவும் எடுத்து வரக்கூடாது என சொல்லபட்டது.
வவுனியா முகாமில் பட்டினி காரணமாய் முப்பதற்கு மேற்பட்டோர் இறந்ததாய் சொல்லபடுகிறது. முகாம்களில் உள்ள பலர் தங்களது குடும்பத்தை பிரிந்து நாற்பது முகாம்களிலும் சிறைபட்டு இருக்கிறார்கள். பலருக்கு தங்களது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்கிற விவரம் கூட தெரியாது. குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் கடுமையான மன உளைச்சலுடன் தொற்று நோயிற்கு பயந்து மக்கள் வாழும் இந்த முகாம்களை நவீன ஹிட்லர் நாஜி முகாம்கள் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க போகிறது.

இந்த முகாம்களில் உள்ள மக்களின் எதிர்காலம் என்ன? இந்த மக்களோடு கலந்து இருக்கும் விடுதலைப்புலிகளை இனம் கண்டு கைது செய்த பிறகு இங்குள்ள மக்கள் அவர்களது நிலபரப்பிற்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என சொல்கிறது இலங்கை அரசு. அப்படியானால் முகாம்களில் கொடூரமான சித்ரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. ஏறகெனவே முகாம்களில் பலர் இலங்கை படையினரால் அழைத்து செல்லபட்டு பிறகு நிரந்தரமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின்றன. இச்சூழலில் இந்த முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்ய பல வருடங்களாகும் என அஞ்சுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

விடுதலைபுலிகளை கைது செய்வதற்காக எடுக்கபட்ட நடவடிக்கை என அரசு காரணம் சொன்னாலும் பல மனித உரிமை அமைப்புகள் இது தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோத பழி வாங்கல் நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன், கொழும்பு நகரில் உள்ள ஓர் அமைப்பு இந்த முகாம்கள் சட்டத்திற்கு விரோதமானது என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. The Center for Policy Alternatives என்கிற அந்த அமைப்பு இந்த வழக்கில் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்ஷே உட்பட பல உயர் அதிகாரிகள் விசாரிக்கபட வேண்டுமென கோரியிருக்கிறது. ஓர் இனத்திற்கு எதிராக ஓர் இனம் எடுக்கும் விரோத/ஒழிப்பு நடவடிக்கையே இந்த முகாம்கள் என தனது மனுவில் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. வழக்கு எப்படி கையாளப்படும் என்பதை இனி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே போர் குற்றங்களுக்காக ஜக்கிய நாடுகள் சபை விசாரணை நடைபெறாமல் போய்விட்டது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது மனசாட்சிகளை பூட்டி வைத்து விட்டு இந்த விசாரணை நடைபெறக்கூடாது என வாக்களித்தனர். இலங்கை அதிபர் ராஜ பக்ஷே போர் குற்றங்களை கண்டறிவதற்காக அமைத்து இருந்த ஒரு கண் துடைப்பு கமிட்டியும் எந்த விசாரணையும் நடத்தாமல் மூடப்பட்டு விட்டது.

நடப்பு காலகட்டம் தமிழ் வரலாற்றில் இரத்த கறை தொய்ந்த பக்கங்களில் எழுதபட்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசு பயங்கரவாதம் மற்றொரு பக்கம் அதை விட கொடூரமான மற்றவர்களின் மௌனம்.

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதல்ல உலக தமிழர்களின் இன்றைய கவலை. மிச்சமிருப்பவர்களாவது உயிருடன் தப்புவார்களா என்பதே அவர்களது அச்சம்.