Loading

Sunday, September 20, 2009

தலித்தை கொளுத்தினார்கள்



இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை எது?
  • பாகிஸ்தானுடன் நீடிக்கும் மோதல் மனபோக்கு
  • நாட்டினுள் ஊடூருவி தொல்லைகள் கொடுக்கும் தீவிரவாதிகள்
  • உள்நாட்டு கலவரம் செய்யும் மாவோயிஸ்ட்டுகள்
  • கட்டுபடுத்த இயலா விலையேற்றம்
  • அரசு நிர்வாகத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் லஞ்சம்
  • சாதி பாகுபாடும் தலித் மற்றும் மலைவாசி மக்கள் மீதான வன்முறைகளும்

என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

மத்திய பிரதேச சம்பவம்
மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சிவ்புரி மாவட்டம். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகம் நடப்பதுண்டு. சவ்புரியில் வசிக்கும் நாராயண் சிங் என்னும் 56 வயது தலித் ஒருவர் இந்த வாரம் உயிரோடு எரிக்கபட்டார். இன்று உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கிறார். 70000 ரூபாய் கடனை திரும்ப செலுத்தவில்லை என்கிற காரணத்திற்காக கடன் கொடுத்தவரின் ஆட்கள் இந்த குற்றத்தை செய்தார்கள் என வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறை தேடி கொண்டிருக்கிறது.

தலித்களின் வறுமையில் பணம் சம்பாதிக்கும் வட்டிக்காரர்கள்
மத்திய பிரதேச சம்பவத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க முடியும். ஒன்று, தலித் மக்களை பெரும்பாலும் ஆட்டி படைக்கும் வட்டிக்காரர்கள். வறுமையில் இருக்கும் தலித் மக்களை குறி வைத்தே இயங்கும் வட்டிக்காரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். பெரும்பாலும் படிப்பறிவற்ற இம்மக்களிடையே சட்டத்திற்கு முரணாக அதிக வட்டிக்கு கடன் கொடுக்கபடுகிறது. கடன் செலுத்த தவறுபவர்களுக்கு அடித்தல், உதைத்தல், நிலத்தை பிடுங்குதல், நகைகளை களவாடுதல், இப்போது நடந்தது போல கொலை முயற்சி, கொலை, அந்த வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டல் என சட்டத்திற்கு முரணான விஷயங்கள் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவத்தை சில மாதங்களுக்கு முன்பு கேள்விபட்டேன். கடன் செலுத்த தவறிய காரணத்தினால், ஓர் ஆட்டோ டிரைவரின் மனைவியை தூக்கி கொண்டு போய் விட்டார்களாம் கடன்காரர்கள். இதை 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் வெளிபடுத்துவதற்காக சம்பந்தபட்டவர்களை தேடிய போது துர்திர்வஷ்டமாக அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இப்படி வறுமையில் உழலும் மக்களை குறி வைத்து, அதிலும் குறிப்பாக தலித் மக்களை குறி வைத்து மிக பெரிய அளவில் வட்டிக்காரர்கள் இயங்குகிறார்கள் என்பது உண்மை.

தலித் மக்களின் நிலங்கள் களவாடபடுகின்றன
மத்திய பிரதேச சம்பவத்தை கவனிக்கும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு பிரச்சனை நில அபகரிப்பு. இந்த சம்பவத்தில் நாராயண் சிங்கின் இரண்டு ஏக்கர் நிலத்தை கைபற்ற கடன் கொடுத்தவர் முயன்று இருக்கிறார். இதில் தான் ஆரம்பமாகி இருக்கிறது பிரச்சனை. சமீப வரலாற்றை புரட்டி பார்த்தால் தலித் மக்களின் நிலம் பல வகைகளில் அபரிதமாக வலுக்கட்டாயமாக பறிக்கபட்டிருப்பதை காணலாம். தலித் மக்களுக்காக ஒதுக்கபட்ட பஞ்சமி நிலத்தை பெரும்பாலும் இன்று சாதி இந்துகள் கையகபடுத்தி வைத்திருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

ஏன் எரிக்கிறார்கள்?
கடைசியாக இந்த விஷயத்தில் நான் எழுத விரும்புவது இது தான். எதற்காக எரிக்கிறார்கள்? ஊரில் பல பேர் முன்னிலையில் எதற்காக இப்படி ஒரு விபரீத தண்டனை? கிராமத்து சாதி இந்துக்கள் முன்னிலையில் தலித் இளைஞர்கள் பல வித அசிங்கங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தலித் பெண்கள் நிர்வாணமாக்கபட்டிருக்கிறார்கள். பண்டிட் குயின் படத்தில் காட்டியது போல ஊரே சேர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போன்ற கொடூரங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. ஊருக்கு நடுவில் இப்படி ஒரு கொடூரமான தண்டனை கொடுக்கும் போது அங்கிருக்கும் மற்ற தலித்கள் இனி காலத்திற்கும் வாய் பேச முடியாத, எதிர்ப்பை காட்ட முடியாத அளவு பயத்தில் உறைந்து போவார்கள். கொங்கோல் அரசர்களும் கிராமத்து பண்ணையார்கள் கண்டு பிடித்த முறை இது. 

"இனி நம்ம சாதி பொம்பளைங்க சாதி மாறி ஆசை வைக்க கூடாது" - கவிதை

தலித் மற்றும் மலைவாசி மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க நாடு தழுவிய விழிப்புணர்வும், கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழுக்களும், தொலை நோக்கு பார்வையாக இதற்கான திட்டங்களும் செயல்வடிவங்களும் போர்கால அவசரத்தில் இயற்றபட வேண்டும். இல்லையெனில் இன்னும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவது மட்டுமல்ல, இந்த நாடு காலத்தே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை பிறகு யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும். அப்புறம் ச்சும்மா நகரத்து மத்திய வர்க்கத்தினரை ஏமாற்ற வேண்டுமானால் '2012இல் இந்தியா வல்லரசு ஆகும்' அல்லது 'ஜிடிபி எட்டினை கடக்கும்' போன்ற அர்த்தமில்லா பிரச்சாரத்தை பரப்பி கொண்டிருக்கலாம்.

நன்றி
புகைப்படம்: Fady Habib (புகைப்படக்காரர் தனது புகைப்படத்தை பற்றி சொன்னது - "பாகுபாடு நிறத்தினை வைத்து தொடங்குவதில்லை அது தனிபட்ட மனிதனின் மனநிலையால் உருவாகிறது. இந்த (புகைப்படத்தில் தோன்றும்) கை உறுதியை பற்றிய கற்பிதத்தினை உருவாக்கலாம். ஆனால் இது உண்மையில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான விரல்களின் ஒற்றுமையால் உண்டானது என்பது புரிந்து கொள்ளபட வேண்டும்.)

2 comments:

D.R.Ashok September 20, 2009 10:48 PM  

படிக்கும் போதே கண்ணீர் வருகிறது சாய்ராம்.

இதை தவிர நாம் என்ன செய்யமுடியும்?

முழுவதும் படிக்க முடியவில்லை.

காத்திரம் எனக்கு தாங்காது. நான் ஒரு ஈரக்காற்று.

படித்துவிட்டு மறுமுறை வருகிறேன்.

Sai Ram September 23, 2009 12:33 PM  

உண்மை தான் அசோக். கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP