Loading

Tuesday, February 10, 2009

இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு

இலையுதிர் காலம் போல நீ.
காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம்.
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
சம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

பொங்கிய பழைய நினைவுகள்
பழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

அந்த நீண்ட பிரிவிற்கு பின்
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.

Read more...

Tuesday, February 3, 2009

ஒப்பனைக்காரர்கள் வீதி

குழந்தையை சுமப்பது போல
இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
பார்க்கும் போது தான்
நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
என்பது உரைக்கிறது.

அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் கரங்களின் மேலிருக்கும்
கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
கட்டாயத்தினை உணரும் போது
முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.

மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
மறைக்க ஓட வேண்டும்
ஏதேனும் பழைய துணியினை தேடி.

குப்பை தொட்டிகளை காண முடியவில்லை.

பளபளக்கும் துணிகள்
கடைகளின் வாசலில் தொங்கியபடி
அனைவரையும் அணைத்து வரவேற்கிறது.

என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

யாரோ மறித்தார்கள்.
எங்கோ அடி விழுந்தது.
கண்கள் இருள்வதற்கு முன்
உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
அல்ல அது நான் தானா?

விடைக்கு முன்னால்
உடல் அடங்கி கொண்டிருக்கிறது.

Read more...

Monday, February 2, 2009

ஒரு வருடமாகி விட்டது!

ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான். இந்த வலையுலகத்தை அறிமுகம் செய்தவர் பாலபாரதி. தொடங்கிய சில நாட்களிலே ஓடி வந்து ஊக்கமளித்து இன்றும் தெம்பு தருபவர் ரவி. தவிர நிறைய நண்பர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன். வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் கவிதைகளை பதிக்க வேண்டும் என்கிற சுய விதிமுறையை அவ்வபோது நான் மீறி இருந்தாலும் 34 கவிதைகளை எழுதியதே எனக்கு பெரிய காரியம். அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.

கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.

வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.

அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.

அனைவருக்கும் நன்றி.

- சாய் ராம்

Read more...

மறுமொழிகள்

Sai's shared items

Nadanthathu Enna's Fan Box

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP